அனைத்துலக பெண்கள் தினம் வருடா வருடம் மார்ச் 8ம் திகதி கடைப்பிடிக்கப்படுகின்றது. பெண்கள் தினத்தை உலகில் பல நாடுகள் வேறுபட்ட தினங்களில் கடைப்பிடிக்கப்படுகின்றபோதும், அனைத்துலகரீதியில் மார்ச் 8ம் திகதியே பெண்கள் தினமாக்கப்பட்டிருக்கின்றது. முன்னாள் சோவியத் யூனியனில் சோவியத் யூனியனின் இணைவிற்காகவும், கம்யூனிசத்தின் உறுதித்தன்மைக்காகவும், தேசப்பற்றுடைன் போராடியதோடு, மக்களுக்கிடையே சகோதரத்துவத்தன்மையை வளர்த்தெடுப்பதற்றம் ஒத்தாசை புரிந்த பெண் சமூகத்தை கௌரவிக்கும் வகையிலேயே மார்ச் எட்டாம் திகதியை பெண்கள் தினமாக முன்னாள் சோவியத் யூனியன் பிரகடனப்படுத்தியது. உலகப் பெண்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்கள் அரசியல், பொருளாதார, கலாச்சார மற்றும் இன்னோரன்ன காரணங்களால் துண்டாடப்பட்டு, ஒருமித்து தமது உரிமைகளுக்காக குரல் தர முடியாதுள்ளனர்.
உலகதின் சனநாயக செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பெரும்ஆற்றல் அரசு என்கிற இயந்திரத்திற்கே உண்டு. இத்தகைய அரசு இயந்திரத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது மேற்கு மற்றும் கிழக்கு நாடுகள் என்ற பேதமின்றி உலகின் சகல நாடுகளிலும் மிகக் குறைந்தளவினதானவே உள்ளது. அபிவிருத்தியில் உச்சத்தைக் கண்டிருக்கும் மேற்கு நாட்டுப் பாராளுமன்றங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே காணப்படுகின்றது. அரசு இயந்திரத்தில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்படாமல், பெண்களால் ஏனைய பொருளாதார, சமூக மாற்றங்கள் எவ்வித தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாதுள்ளனர்.
உலகின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி வரும் பெண்கள், அப் பொருளாதார வளர்ச்சியில் பங்காளர்கள் ஆக்கப்படாமல் மாறாக மிகக் குறைந்தளவு சொத்துரிமை உடையவர்களாக்கப்பட்டுள்ளனர். உலகில் பொருளாதார பலமற்றவர்களாகவே பெண்கள் காணப்படுகின்றனர். அரசியல் மற்றும் பொருளாதார பலமற்றவர்களாக காணப்படும் பெண்கள், தொடர்ச்சியாக தீர்மானம் மேற்கொள்ளும் (னநஉளைழைn அயமநசள) பலமற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். உலகில் சகல துறைசார்ந்தும் குறிப்பாக பெண்களின் உரிமைசார்ந்த விடயத்திலும் ஆண்களே தீர்மானம் மேற்கொள்ளும் நிலைமை இன்றும் காணப்படுகின்றது.
அந்தவகையில் அரசு இயந்திரத்தில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் அங்கம் வகித்தாலே பெண்கள் உரிமைசார்ந்த பல விடயங்கள் சுலபமாக தீர்க்கப்பட்டுவிடும் என்பது பல பெண்ணியல்வாதிகளினதும், சமூக ஆய்வாளர்களதும் கருத்தாகவிருக்கின்றது.
ஒரு தேசிய இனவிடுதலைப் போராட்டம், அரச பயங்கரவாதத்தால் அடக்கி ஒடுக்கப்படும்போது அங்கும் பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுவது ஒவ்வொரு போராட்ட வரலாறும் காட்சிப்படுத்தும் உண்iமாயாகவுள்ளது. பெண்களுக் கெதிரான பாலியல் வல்லுறவு என்பது ஓர் போரியல் ஆயுதமாக அரச அடக்குமுறையாளர்களால் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றமை வரலாற்றின் ஊடாக அறியப்படுகின்றது. எடுத்துக்காட்டாக கொசுவா நாட்டில் சேர்பிய அரச அடக்குமுறையாளர்களால் ஒரு இலட்சத்திற்கு அதிகமாக பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டமையால், அப் பெண்கள் சேர்பிய குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். பெண்கள் மீதான பாலியல் வல்லுறவானது ஓர் தேசிய இனத்தின் அடையாளத்தை சிதைக்கும் ஓர் செயற்பாடாக பார்க்கப்படுவதோடு, இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாலியல் வல்லுறவும் பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில் 21ம் நூற்றாண்டின் உலகில் மிலேச்சத்தனமாக நடத்தப்பட்ட மனிதப்படுகொலையாக வரலாற்றில் நோக்கப்படவிருக்கும் வன்னிப் படுகொலைகள் ஆயிரம் ஆயிரம் பெண்கள் படுகொலைக்குள்ளாக்கப்பட்டதோடு, 30 வருட கால ஆயுதப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் தமிழிச்சியாக பிறந்த ஒரே ஒரு காரணத்திற்காக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கபட்டிருப்பதோடு, பல்லாயிரக்கணக்கான பெண்கள் குடும்பத் தலைவர்களை இழந்து, குடும்பத்தை தலைமை தாங்கும் பெண்களாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்களின் தொதை ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமான இருக்கலாம் என அரச சார்பற்ற நிறுவனங்களின் கணிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.
2010ம் ஆண்டின் அனைத்துலக பெண்கள் தினத்தையொட்டி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வாழும் பெண்களின் துயர் துடைக்கும் ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளது. அந்தவகையில் தமிழீழப் பெண்கள் பக்கமும் அனைத்தலுக சஞ்சிலுவைச் சங்கம் தனது பார்வையை செலுத்துவதற்கான முன்னெடுப்புக்களை நோர்வே ஈழமக்கள் அவையுடன் இணைந்து புலம் பெயர் வாழ் தமிழ் மக்களும் செயற்பட வேண்டும் என ஈழ மக்கள் அவை வேண்டி நிற்கின்றது. தொடர்ச்சியாக ஈழ மக்கள்அவை பெண்களுக்கு எதிரான சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராடும் என இந்நேரத்தில் உறுதி பூணுகின்றது.